ராஜாவை நீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அதிமுகவினர் தந்தி
சென்னை: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜாவை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தந்தி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனைத்து இந்தியர்களும் தந்தி அனுப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதையடுத்து நேற்று தமிழகத்தில் அதிமுகவினர் தந்திகளை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தந்தி அனுப்பும் இயக்கத்தை அக்கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் சென்னை ஜார்ஜ் டவுன் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி. ஜெயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் நீலகண்டன், பொருளாளர் வெற்றிவேல், கு. சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தந்திகளை அனுப்பினர்.
வட சென்னை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்தும் வியாழக்கிழமை சுமார் 9 ஆயிரம் தந்திகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன என்றும், வெள்ளிக்கிழமை மேலும் ஆயிரக்கணக்கான தந்திகள் அனுப்பப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தென் சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தந்தி அனுப்பும் இயக்கம் கிண்டி தபால் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் வா.மைத்ரேயன், மாவட்டச் செயலாளர் ஜி. செந்தமிழன், பொருளாளர் கோ. சாமிநாதன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தந்திகளை அனுப்பினர்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான தந்திகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாக அதிமுக தரப்பு கூறியுள்ளது.
சில இடங்களில் பெருமளவில் அதிமுகவினர் தந்தி அனுப்பக் குவிந்ததால், அவசரத்திற்காக தந்தி அனுப்ப வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர்.