கதவு திறக்கும்-ஓ.பி; திறக்குமா, திறக்காதான்னு எங்களுக்குத் தான் தெரியும்-கருணாநிதி

சட்டசபையில் துணை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:
ஓ. பன்னீர்செல்வம்: இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி பல மடங்கு உயர்ந்து விட்டது. (மளிகை பொருட்களின் அன்றைய விலையையும், இன்றைய விலையையும் வாசித்தார்). படிக்கும் போதே தலை சுற்றுகிறது.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: அம்மா ஆட்சியில் சும்மா கிடைத்தது என்றும் சொல்வீர்கள்.
ஓ. பன்னீர்செல்வம்: கட்டுமான பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டது. முதல் அமைச்சர் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வீடு வழங்கும் திட்டத்தில் எப்படி ஒரு வீட்டை ரூ.75 ஆயிரத்துக்கு கட்ட முடியும்.
அமைச்சர் எ.வ. வேலு: எங்கள் மாவட்டத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிட்டு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு விட்டது.
அமைச்சர் அன்பழகன்: முன்பு ஒரு வீட்டுக்கு ரூ.60 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தேவைப்பட்டால் மேலும் நிதியை உயர்த்த நாங்கள் தயங்க மாட்டோம்.
பின்னர் ஓ.பன்னீர் செல்வம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பேச ஆரம்பித்தார். ஆனால் அதை சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: மத்திய அரசாங்கமே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் அமைச்சர் எந்த தவறும் செய்யவில்லை. முறைகேடு நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறது.
அமைச்சர் அன்பழகன்: உங்கள் கட்சி தலைவர் மூலம் காங்கிரசில் சேர விண்ணப்பம் போடப்பட்டு டெல்லி அதை ஏற்காததால் கதவு சாத்தப்பட்டது. அதனால் தான் இந்த பிரச்சனை பற்றி ஓ. பன்னீர்செல்வம் இங்கு பேசுகிறார்.
ஓ. பன்னீர்செல்வம்: மூடப்பட்ட கதவு திறக்கப்படும்.
முதல்வர் கருணாநிதி: கதவு திறப்பதும், திறக்காததும் எங்களுக்குத் தான் தெரியும்.












Click it and Unblock the Notifications