காதலியைக் கொன்ற வழக்கில் சிங்கப்பூர் தமிழருக்கு மரண தண்டனை
சிங்கப்பூர்: டீன் ஏஜ் வயதுடைய தனது முன்னாள் காதலியைக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயது தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வாலிபரின் பெயர் பார்த்திப செல்வன் சுகுமாறன். 24 வயதாகும் இவரது முன்னாள் காதலி ஜீவிதா பழனியப்பன். இவருக்கு 18 வயது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆங் மோ கியோ என்ற இடத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைத்து ஜீவிதாவைக் கொலை செய்தார் பார்த்திபன்.
இதையடுத்து போலீஸார் பார்த்திபனைக் கைது செய்தனர். உன்னை விட எனது புதிய காதலன் படுக்கை அறையில் சிறப்பாக செயல்படுகிறான் என்று கூறி தன்னை ஜீவிதா கேலி செய்ததால் அவரைக் கொன்றதாக போலீஸில் வாக்குமூலம் அளித்தார் பார்த்திபன்.
கோர்ட் விசாரணையின்போது தான் செய்தது தவறு என்று அப்போது தெரியவில்லை. தனது மனம் அப்போது வெறுமயாக இருந்தது. இதனால்தான் கொலை செய்தேன் என்று கூறியிருந்தார் பார்த்திபன்.
அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதை மேற்கொண்ட மனநல மருத்துவர் டோமி டான், பார்த்திபனுக்கு கவனக் குறைபாடு பிரச்சினை இருப்பதாக அறிக்கை கொடுத்தார். இதனால் அவர் குற்றத்தை நிகழ்த்தியபோது அவரது கட்டுப்பாட்டிலேயே இருந்திருக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இருந்தாலும் பார்த்திபனை மன நலம் பாதித்தவராக ஏற்றுக் கொள்ள முடியாத என்று கூறிய சிங்கப்பூர் உயர்நீதிமன்றம், முன்னாள் காதலியைக் கொலை செய்த குற்றத்திற்க்காக பார்த்திபனுக்கு மரண தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டது.