ராஜாவை குற்றவாளி என்று சிஏஜி அறிக்கை கூறவில்லை-வீரப்ப மொய்லி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான நடைமுறைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள சிஏஜி அறிக்கை, ராஜாவை குற்றவாளி என்று குறிப்பிட்டுக் கூறவில்லை என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிஏஜி-யின் அறிக்கையை குற்றச்சாட்டாகக் கருத முடியாது. அது இறுதி தீர்ப்பும் அல்ல. சிஏஜி அறிக்கை காரணமாக எந்தவொரு அமைச்சரும் ராஜிநாமா செய்ததாக எனக்கு நினைவில்லை.
எனினும், அரசியலமைப்பில் சிஏஜியும் முக்கிய அங்கம். அதன் அறிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். குறிப்பிட்ட ஓர் அமைச்சகம் மீது சிஏஜி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதன் பின்னர், நாடாளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி, சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்ட பத்திகளைத் தேர்வு செய்து விவாதம் நடத்தும். அதற்கு குறிப்பிட்ட துறை பதில் அளிக்க வேண்டும். இதுதான் நடைமுறை.
அலைக்கற்றை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்புவதை தவறாகக் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு முழுஉரிமை உண்டு. பாஜக ஆட்சியில் பிரமோத் மகாஜன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது சிஏஜி இதேபோல் குற்றச்சாட்டை எழுப்பியது. அதற்காக அவர் ராஜிநாமா செய்யவில்லையே என்றார் அவர்.