கள்ளக்காதலியை கொன்று ஏட்டு தற்கொலை வழக்கு : இன்ஸ்பெக்டர், பெண் எஸ்ஐ உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
நெல்லை: மணிமுத்தாறு பட்டாலியன் ஏட்டு கள்ளக்காதலியை கொன்று, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த வழக்கில் துப்பாக்கி பதிவேடுகளை பராமரிக்காத இன்ஸ்பெக்டர், பெண் எஸ்.ஐ. உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 9-வது பட்டாலியன் உள்ளது. இந்த பட்டாலியனின் ஆயுதக்கிடங்கில் ஏட்டாக பணியாற்றியவர் இசக்கிமுத்து. இவருக்கும் அங்கு பணிபுரிந்த ஏட்டு உமா மகேஸ்வரிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்நிலையி்ல் உமா மகேஸ்வரிக்கு அங்குள்ள மற்றொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
தன்னை விட்டு அடுத்தவரிடம் பழகிய உமா மகேஸ்வரியை இசக்கிமுத்து கண்டித்தார். எனினும் உமா மகேஸ்வரியின் தொடர்பு நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து உமா மகேஸ்வரியை கடந்த மாதம் 18-ம் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர் பட்டாலியனில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எடுத்துக் கொண்டு பைக்கில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி சென்றுள்ளார். அங்கிருந்த மற்றொரு கள்ளக்காதலியான கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அம்பாசமுத்திரம் மற்றும் பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தினர். மணிமுத்தாறு ஆயுதக்கிடங்கில் இருந்து கைத்துப்பாக்கியை எப்படி யாருக்கும் தெரியாமல் அவர் எடுத்துச் சென்றார் என்பது குறித்து டி.ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், பட்டாலியன் கமாண்டண்ட் கல்பனா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆயுதக்கிடங்கில் இருந்த வைப்பறையின் பதிவேடுகளை சரிவர பராமரிக்காமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆயுதக்கிடங்கு இன்ஸ்பெக்டர் ராஜூ, எஸ்.ஐ. கிருஷ்ணவேணி, காவலர் சி்மி ஆகியோரை பட்டாலியன் கமாண்டண்ட் கல்பனா நாயக் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.