சோனியா - மன்மோகன்; கருணாநிதி - ராசா சந்திப்புகள்... பரபரப்பில் அரசியல் களம்!!
இதைத் தொடர்ந்து, ராசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினர்.
மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, சோனியாகாந்தியின் அரசியல் செய்தியாளர் அகமது பட்டேல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராசா விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறி இருக்கிறார் ராசா.
முதல்வர் கருணாநிதியும், ராசா பதவி விலக மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திமுக தரப்பில் தொடர்ந்து காஹ்கிரஸ் மேலிடத்திடம் ராசாவுக்காக பரிந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
முதல்வர் - ராசா சந்திப்பு; துரைமுருகன் டெல்லி பயணம்!
இதற்கிடையே மத்திய அமைச்சர் ராசா, முதல்வர் கருணாநிதியை இன்று சென்னையில் இரண்டாவது முறையாகச் சந்தித்துப் பேசினார்.
இன்னொரு பக்கம், முதல்வரின் முக்கிய கடிதத்துடன் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ராசா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் சில முக்கிய தகவல்களை நேரில் தெரிவிக்கவே அவர் சென்றுள்ளதாக திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.