மகள் கற்பழித்து கொலை: 6 வருடங்களாக போராடும் தந்தை-நினைவு நாளில் உண்ணாவிரதம்
திருவனந்தபுரம்: தனது மகள் கற்பழித்துக் கொல்லப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்காததால் தந்தை தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கிளியனூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் மகள் சாரி. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சாரி மர்ம நபர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். 6 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குற்றவாளிகளை பிடித்தபாடில்லை.
சாரி கொலை செய்யப்பட்டபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த அச்சுதானந்தன் இந்த கொடூரக் கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகளைத் தண்டிக்கும் என்றும் போராட்டம் நடத்தினார்.
தற்போது அவர் ஆட்சிக்கு வந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே, சுரேந்திரன் அச்சுதானந்தனின் ஆட்சியில் நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி கடந்த 13-ம் தேதி தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அங்கு தனது மகளின் புகைப்படத்தையும் வைத்திருந்தார்.
அவரைப் போலீசார் அப்புறப்படுத்த முயன்றும் மகளுக்கு நீதி கேட்டு உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அவர் தனது மகளின் ஒவ்வொரு நினைவு நாளன்றும் நீதி கேட்டு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications