நாமக்கல் கலெக்டராக சகாயத்தை மீண்டும் நியமிக்க பேராயர் சின்னப்பா கோரிக்கை
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயத்தை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம்.சின்னப்பா முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம்.சின்னப்பா முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையாவது,
நாமக்கல் மாவட்ட கலெக்டராக கடந்த இருபத்தேழு மாதங்களாகத் திறம்படத் பணியாற்றி, தமிழக முதல்வராகிய தங்களின் பாராட்டுதலைப் பெற்று, நாமக்கல் மாவட்டம் பல்துறைகளில் வளர அயராது பாடுபட்டவர் உ.சாகயம்.
தலைமைச் செயலாளர் மாலதி அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என்ற அரசின் மாவட்ட முதன்மை ஊழியராகத் திறம்படப் பணியாற்றி தங்களின் ஒவ்வொரு கனவு திட்டத்திற்கும் தன்னையே அர்ப்பணித்து, அதனைத் தமது நாமக்கல் மாவட்டத்தில் திறம்படச் செயல்படுத்தி, மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தங்களின் பாராட்டைப் பெற்றவர்.
எந்தச் சூழ்நிலையிலும் இலஞ்சம் வாங்காமல், எந்தச் சமயத்திலும் எதற்கும் விலை போகாமல் மிகச் சிறந்த அரசு ஊழியராகப் பணியாற்றி தனது ஆட்சியர் பதவிக்கு அழகும், பெருமையும் சேர்த்தவர்.
நேர்மையான அதிகாரியாக, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் தனது சொத்துப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டு எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
ஊழல் ஒழிப்புப் போராளியாக, இளைஞர் - இளம் பெண்களின் விடிவெள்ளியாக அனைத்து வழிவகைகளிலும் செயல்பட்டவர்.
இப்படி அரசு வகுக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றையும் சிறப்பாகச் செயல்படுத்தி நாமக்கல் மக்களின் மனதில் பதிந்தவர் உ.சகாயம்.
இவருடைய அசாத்திய நேர்மையையும், துணிச்சலையும் கண்டு குறுக்கு வழிகளில் வருமானம் பார்க்க இயலாத அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு சில அரசியல்வாதிகளும் இவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, இவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளனர்.
சில சுயநல அரசு அதிகாரிகளும், சுயநலமிக்க அரசியல்வாதிகளும் தவிர நாமக்கல் மாவட்ட மக்கள் இவருடைய பணியிடமாற்றம் குறித்து பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, இவருடைய பணியிட மாற்றம் அறிவிக்கப்பட்ட நாளிலேயே பன்னிரு பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். நாமக்கல் மாவட்டம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இப்படி அனைத்து சமய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவரான சகாயம் மதமாற்றம் செய்தார் என்ற ஓர் அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது கண்டு கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேதனையடைகிறோம்.
நேர்மையான அரசு ஊழியராகப் பணியாற்றிய உ.சகாயம் அவர்களை இன்னும் ஓராண்டு பணிபுரிய வாய்ப்பிருந்தும் பணியிட மாற்றம் செய்திருப்பது கிறிஸ்தவர்களையும், பிற சிறுபான்மையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறுபான்மையினரின் காவலாரன தாங்கள் எங்கள் கோரிக்கையைத் தாயன்புடன் பரிசீலித்து, உ. சகாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கி, அவரை மீண்டும் நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்க வேண்டுகின்றேன்.
இவ்வாறு அவர் அந்த கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications