தீவிரமடைந்தது மழை.. தத்தளிக்கும் சென்னை!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி வந்ததால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த பகுதி வங்க கடலில் தற்போது தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது.
இது சென்னைக்கு கிழக்கே 400 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதால், வேலூர் உள்ளிட்ட வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவில் சற்று கனமான தூறலாக ஆரம்பித்த மழை, இன்று காலையில் வலுக்கத் தொடங்கியது. புறநகரிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அலுவலகங்கள் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர். ஆனாலும் விடுமுறை விடப்படவில்லை.
கடும் போக்குவரத்து நெரிசலில் பெரும் அவதிக்குள்ளாகினர் வாகனம் ஓட்டுவோர்.
இன்று காலை வரை நுங்கம்பாக்கத்தில் 5.6 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 8.3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications