ராசா ராஜினாமா: ஆனாலும் அமைச்சரவையில் மாற்றம் இல்லை! - பிரதமர் அதிரடி

காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட ஒரு முடிவை எடுத்துவிட்டதோ என்று அரசியல் நோக்கர்கள் கேட்கும் அளவுக்கு அடுத்தடுத்த திருப்பங்கள் டெல்லி அரசியலில் நிகழ்ந்து வருகின்றன.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்ததும், இந்தத் துறைக்கு திமுகவின் கனிமொழி அமைச்சராவார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரதமரோ அந்தத் துறையை தாமே கவனிக்கப் போவதாக முதலில் அறிவித்து, அடுத்த சில மணி நேரங்களில் கபில் சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுத்தார்.
இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். விரைவில் புதிய அமைச்சர் யார் என்பதை திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என கனிமொழி, டி ஆர் பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கூறிவந்தனர்.
இப்போது அதற்கும் அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரதமரும் சோனியா காந்தியும். அமைச்சரவை விஸ்தரிப்பு அல்லது மாற்றம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவி்த்துள்ளார்.
மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே பல இலாகாக்கள் அமைச்சர்கள் இல்லாமல் காலியாகத்தான் உள்ளன. வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி பதவி வகித்த சசி தரூர் ஐ.பி.எல். ஏல சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்தார். பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்த பிரிதிவிராஜ் சவான் மராட்டிய முதல்வராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து சமீபத்தில் அந்தப் பதவியும் காலியானது.
இதனால் வெளியுறவுத் துறை, பிரதமர் அலுவலக இலாகாக்கள் காலியாகத்தான் உள்ளன. இதற்கிடையே சில மத்திய அமைச்சர்கள் அதிக இலாகாக்களை வைத்துக் கொண்டு, கூடுதல் சுமையுடன் உள்ளனர். மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபலிடம் ஏற்கனவே அறிவியல், தொழில் நுட்பம் துறைகள் கூடுதலாக உள்ளன.
தொலைத் தொடர்புத் துறையும் அவரிடம் சென்றிருப்பதால் 3 பேர் இலாகாவை அவர் ஒருவரே கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலும் ஒரு மந்திரி பதவியை கேட்டுக் கொண்டிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், தன்னிடம் உள்ள இலாகாக்களில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளார்.
எனவே மத்திய அமைச்சரவையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதில்லை. இது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் இப்போது நடைபெறாது என்பது உறுதியாகி உள்ளது.
அடுத்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு விடுமுறைகள் தொடர்ச்சியாக வரவிருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி முடியும் வரை அமைச்சரவை மாற்றமே இல்லாத நிலை.
உடனடியாக அமைச்சரவை மாற்றம் என்று வந்தால், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நெருக்கடி இருக்கும் என்பதால், இதனை முடிந்தவரை தள்ளிப் போட்டுள்ளது காங்கிரஸ் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ராசாவுக்கு பதில் உடனடியாக திமுக எம்பி அந்தப் பதவியைப் பெறுவார் என்ற நம்பிக்கையிலிருந்த திமுகவுக்கு பிரதமரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அதே நேரம், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை தவிர்க்கவே இப்படி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications