நாளை அழகிரி மகன் தயாநிதி திருமணம்-மதுரை வந்தார் கருணாநிதி
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், முதல்வர் கருணாநிதியின் பேரனுமான தயாநிதி அழகிரியின் திருமணம் நாளை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இன்று விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தார்.
இன்று பிற்பகல் மதுரை வந்த முதல்வருடன் மனைவி தயாளு அம்மாளும் உடன் வந்துள்ளார். விமான நிலையத்தில் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, அரசினர் விருந்தினர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று மாலை தமுக்கம் மைதானத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல்வர் கலந்து கொள்கிறார்.
பிரணாப்முகர்ஜி, ப.சிதம்பரம் வருகை:
இதேபோல தயாநிதியின் திருமணத வரவேற்பில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாளை நடைபெறும் திருமணத்திலும் இவர்கள் பங்கேற்கிறார்கள்.
வரவேற்பு மற்றும் திருமணத்தையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வருகையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 4000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருமணம் மற்றும் வரவேற்பு நடைபெறும் தமுக்கம் மைதானத்திலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருமணம் அல்லது வரவேற்பு ஏதாவது ஒன்றில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.