ஐஐடி- கான்பூர் மாணவி தற்கொலை: 3 நபர் குழு அமைத்து விசாரணை
கான்பூர்: கான்பூர் ஐஐடியில் இறுதி ஆண்டு படித்த பிடெக் மாணவி நேற்று விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதுரி. அவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று விடுதி அறையில் தன் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஐஐடி கான்பூரின் பதிவாளர் சஞ்சீவ் கஷால்கர் கூறியதாவது,
மாதுரி விடுதி அறையில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டுக கொண்டார்.
இது குறித்து விசாரிக்க 3 நபர் குழு ஒன்றை அமைத்துள்ளது ஐஐடி நிர்வாகம். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதின் காரணம் தெரியவில்லை. அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருந்துள்ளார். அதனால் அவர் மரணத்திற்கு படிப்பு காரணமாக இருக்க முடியாது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. அவர் தோழிகள் வெகு நேரமாக கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அவர்கள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் மின் விசிறியில் தொங்கிக கொண்டிருந்தார். அப்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கதவை உடைத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. மாதுரி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்க அவர் தோழிகள் மறுத்துவிட்டனர். இன்னும் சில தினங்களில் தேர்வு வரவிருக்கிறது. கல்லூரி நிர்வாகிகள் மாதுரியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
5 ஆண்டுகளில் 8 மாணவர்கள் தற்கொலை:
நேற்று தற்கொலை செய்து கொண்ட பி.டெக். இறுதியாண்டு மாணவியையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி கான்பூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் எம். டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சுமன் (24) தூக்கில் தொங்கினார். 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி.டெக். முதலாண்டாம் ஆண்டு மாணவன் பிரஷாந்த் குமார் தற்கொலை செய்தார். அதே ஆண்டு மே மாதத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்த டோயா சாட்டர்ஜி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரலில் ஜே. பரஜ்வாஜ் என்னும் மாணவனும், 2006-ம் ஆண்டு நவம்பரில் அபிலாஷ் பிள்ளை என்பவரும், 2006-ம் ஆண்டு ஏப்ரலில் ஷைலேஷ் ஷர்மாவும், 2005-ம் ஆண்டு நவம்பரில் ஸ்வப்னில் பாஸ்கரும் தற்கொலை செய்து கொண்டனர்.