சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 200 டிவிக்கள் நாசம், ஒருவர் பலி
சுரண்டை: சுரண்டை பகுதியில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் மற்றும் 200 டிவிக்கள் சேதமடைந்தன. மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.
சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வெயில் கொளுத்தியது. நேற்று காலையிலும் வெயில் அடித்த நிலையில் மாலை 3 மணி அளவில் திடீரென வானில் மேகக் கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மின்னல் தாக்கியதில் சுரண்டையில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் 200 டிவிக்கள் சேதமடைந்தன. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் சுரண்டை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
சுரண்டை வரகுணராமபுரத்தைச் சேர்ந்தசவர் பால்சாமி. விவசாயியான இவர் நேற்று மாலை வீட்டில் டிவி போடும்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து சுரண்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சுரண்டை அண்ணாசிலை பகுதியைச் சேர்ந்தவர் முருகையா. இவர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை முருகையா வீ்ட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் தூக்கி எறியப்பட்டார். அவரது வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதே போன்று அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்த 2 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி கருகின.