எதியூரப்பாவுக்கு எதிராக 61 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு மனு?
பெங்களூர்: தனது மகன்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ. 500 கோடி மதிப்புள்ள நிலத்தை அடி மாட்டு விலைக்கு ஒதுக்கீடு செய்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக கர்நாடக பாஜகவில் 61 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.
இவர்கள் அனைவரும் எதியூரப்பாவை நீக்கக் கோரி கட்சி மேலிடத்திற்கு தங்களது கையெழுத்துடன் கூடிய மனுவை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் எதியூரப்பாவுக்கு மீண்டும் சிக்கலாகியுள்ளது.
முன்பு எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, அவரை நீக்க முடியாமல் தோல்வியைத் தழுவிய ரெட்டி சகோதரர்கள்தான் இந்த முறையும் எதியூரப்பாவுக்கு எதிராக மறைமுகமாக களத்தில் குதித்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
கடந்த சில நாட்களாக எதியூரப்பாவை நீக்கக் கோரிய மனுவில் இவர்கள் கையெழுத்தி வாங்கி வந்தனர். இப்போது இந்த கையெழுத்துடன் கூடிய மனுவை கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.
நேற்றுதான், கத்காரி தனது ஆட்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக எதியூரப்பா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
61 எம்.எல்.ஏக்கள் எதியூரப்பாவுக்கு எதிராக மனு அளித்திருப்பதால் இதுகுறித்து விளக்கம்கேட்டு மாநில தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு கத்காரி உத்தரவிட்டுள்ளாராம். மேலும், எதியூரப்பாவுக்கு நெருக்கமான அமைச்சரான ஷோபா கர்தலஜே மீதும் புகார்கள் வெடித்துள்ளதாம்.
ஏற்கனவே வீட்டு வசதித்துறை அமைச்சர் கட்டா சுப்ரமணியம் நாயுடு, அவரது மகனான கவுன்சிலர் கட்டா ஜெகதீஷ் ஆகியோர் மீது நில ஊழல் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் எதியூரப்பா மீதே நில மோசடிப் புகார்கள் குவிந்து வருவதால் பாஜக மேலிடம் கவலை அடைந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூர் வந்து நேரில் விசாரணை நடத்த கத்காரி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர் 25ம் தேதி பெங்களூர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.