பதவிக் காய்ச்சலால் அவதிப்படும் அதிமுக-கி.வீரமணி
சென்னை: நாட்டின் பிரதமருக்கு எண்ணற்ற பணிகள் உண்டு. சு.சாமியின் கடிதம் வருகிறதா என்று பார்த்து, உடனே தபால் எழுதிட அவர் ஒன்றும் சாதாரண எழுத்தர் அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிடுள்ள அறிக்கையில்,
'ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவர்களுக்கு ஏதா லாபம்" என்ற கிராமியப் பழமொழிக்கொப்ப, நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று ஜனநாயகத்தை சந்தைக் கடையாக்கி வரும் எதிர்க்கட்சியினருடன் சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதற்காக, மத்திய அமைச்சர் ராசாவின் பதவி விலகல் நடந்தது செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல!.
கொலை வழக்குகளில்கூட, வெறும் முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்.) வைத்தே எந்தக் குற்றம் சாற்றப்பட்டவரையும் தூக்கில் போட்டுவிட முடியாது. முறைப்படி விசாரணை, சாட்சியங்கள், குறுக்கு விசாரணை, பிறகு தீர்ப்பு, அதற்கு மேலும் மேல்முறையீடு (அப்பீல்) என்று உண்டு.
ஆனால், ராசா விஷயத்தில் கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவை என்பதை மறந்து, தனி ஒரு அமைச்சர் பலிகடாவாக்கப்பட்டவுடன், எதிர்க்கட்சியினர், அதிமுக போன்ற பதவிக் காய்ச்சலால் அவதிப்படும் கட்சியினர்கள் மேலும் ஒருபடி சென்று, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்கின்றனர்.
இந்தக் கூட்டுக் குழு விசாரணை என்பதைவிட, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் (பாஜக தலைவர் முரளிமனோகர் ஜோஷியை) தலைவராகக் கொண்ட பொது கணக்குக் குழு சக்தி வாய்ந்தது என்பதை ஏனோ அவர்கள் வசதியாக மறந்துவிட்டனர்!.
பிரதமர் மன்மோகன் சிங் மீது பாய வைத்துள்ளனர் உச்ச நீதிமன்றத்தை!. 'தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, பிறகு மனிதனையே கடிப்பது" என்ற நிலையிலே இப்போது தங்கள் கை ஓங்கிவிட்டதுபோல 'பிரமையில்" ஆழ்ந்துள்ளனர் அவர்கள்.
இதற்கு காங்கிரஸ் கட்சி ஐய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடன்பட்டால், அது மேலும் மேலும் ஆட்சிக்கு அன்றாடத் தொல்லையாகிவிடும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு,
சி.பி.ஐ. விசாரணை இப்படி பல தளங்களில் வழக்குகள் விசாரணைகள் உள்ளபோது, ஜே.பி.சி. விசாரணை தேவையற்றது.
இதற்கு மத்திய அரசு உடன்பட்டால், அதைவிட அது கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையில் சொறிந்து கொள்ளும் அபாயம் வேறில்லை. நாட்டின் பிரதமருக்கு எண்ணற்ற பணிகள் உண்டு. சு.சாமியின் கடிதம் வருகிறதா என்று பார்த்து, உடனே தபால் எழுதிட அவர் ஒன்றும் சாதாரண எழுத்தர் அல்ல.
புகார் வந்தால், முறைப்படி சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அதை அனுப்பி, அந்தந்த அமைச்சர்களை விட்டு ஆய்வு செய்து பிறகு பதில் எழுதச் செய்வதுதான் மத்திய அரசின் பிரதமரின் கடமையாகும்! அதற்குரிய காலதாமதம் தவிர்க்க இயலாததே!.
சு.சாமிக்குப் பதில் வருவதில் காலதாமதம் என்று கூறுவது விசித்திரமானது. ஒருவர் மீது பிராசிகியூஷன் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிப்பது, அதுவும் பிரதமர் அலுவலகம் அனுமதி அளிப்பது என்றால், அதனை சம்பந்தப்பட்ட துறைகள், சட்டத்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளுக்கும் அனுப்பிதானே, கருத்தறிந்த பின்னர்தானே பதில் கூற முடியும்?.
இது என்ன கடையில் கத்தரிக்காய் வாங்கும் செயலா?. எனவே, சில ஊடகங்கள் உள்நோக்கத்தோடு ஊதுவதற்கெல்லாம் மத்திய அரசு செவி சாய்த்தால், அதன் பாரதூர விளைவுகள் என்னவாகும்?. ஐய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசே வீட்டுக்குப் போகவேண்டும் என்று தலை துள்ளி ஆட எதிர்க்கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும்!.
இன்றோடு 6வது நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுவிட்டது!. இதற்காகவா மக்கள் இவர்களைத் தேர்வு செய்தார்கள்?.
விவாதத்தைச் சந்திக்கத் தயார் என்று ஆளும் தரப்பு கூறும்போது, அதில் கலந்து பேசி, வாதாடவேண்டியதுதானே சரியான நாடாளுமன்ற முறை?.
எனவே, சண்டித்தனத்திற்கு இசையக் கூடாது. நாடாளுமன்றத்தின் மாண்பினை, உயர்நெறியை, பாரம்பரியப் பெருமையினைக் காக்க காலவரையின்றி ஒத்திவைத்து, அரசு தனது அன்றாட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களாட்சியின் மாண்பையும், மரியாதையையும் காப்போரின் கடமையாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications