மாணவனை 3-வது மாடியில் இருந்து தள்ளிய சீனியர்கள் : உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
துர்காபூர்: கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை, இறுதியாண்டு மாணவர்கள் 3-வது மாடியில் இருந்து கீழே பிடித்துத் தள்ளினர். இதில் அம் மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி ஆன் சோனைச் சேர்ந்தவர் உஜ்வால் ஆனந்த். அவர் பாங்குரா மாவடத்தில் உள்ள பிஸ்னுபூர் மலபூம் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
கடந்த 16-ம் தேதி இறுதியாண்டு மாணவர்களான தீபக் குமார், அனிஷ் குமார் ஷர்மா ஆகியோர் ஆனந்தை 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளினர். இதில் ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அக்கல்லூரியின் முதல்வர் சஜால் குமார் சான்யால் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு ராகிங் காரணமா என்று கேட்டதற்கு, 'நீங்கள் ஏன் ராகிங் என்று நினைக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதன் விளைவு. அந்த மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்துள்ளோம் என்றார்.
'இந்த சம்பவம் ராகிங் என்று எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை' என்று எஸ்.பி. பிரனாப் குமார் தெரிவித்தார்.