ஆந்திராவில் காங்கிரஸின் 125-வது ஆண்டு கொண்டாட்ட நிறைவு விழா
தராபாத்: காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி கொண்டாடியது. அந்த கொண்டாடங்கள் நேற்று இரவு நடந்த பிரமாண்ட விழாவுடன் நிறைவடைந்தன. இதில் ஆந்திர முதல்வர் ரோசையா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிறைவு விழாவில் ரோசையா, ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பேசினர். அவர்கள் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவு கூர்ந்தனர். மேலும், சோனியா காந்தியின் தலைமையைப் புகழ்ந்து பேசினர்.
அப்போது பேசிய ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "நான் உங்கள் (ரோசையா) அளவிற்கு பெரிய மனிதன் கிடையாது. நீங்கள் அனுபவம் நிறைந்த மூத்த தலைவர். நான் உங்கள் மகன் போன்றவன். கட்சி சார்பில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசு கட்சிக்காரர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்", என்றார்.