For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாமீனில் வெளிவந்தவர் ஊழல் கண்காணிப்பு ஆணையரா? மத்தியஅரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

Google Oneindia Tamil News

PJ Thomas
டெல்லி: பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் சிக்கி, குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம் பெற்று, தற்போது ஜாமீனில் வெளியாகியிருக்கும் பி.ஜே.தாமஸை தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

பி.ஜே.தாமஸ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் 1992ம் ஆண்டு மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ. 2.8 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து வழக்கு தொடரப்பட்டது. இதில் தாமஸ் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் கைதான தாமஸ் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி இதை புறக்கணித்தது.

இந்த நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாமஸ் நியமனம் தொடர்பான கோப்புகளை அட்டர்னி ஜெனரல் வாகனாவதி தாக்கல் செய்தார்.

இதை பெற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, இந்த கோப்புகளைப் பார்க்காமலேயே கேட்கிறேன். ஒரு ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்தவர், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் கிரிமினல் வழக்கில் சிக்கிய ஒருவர் எப்படி தலைமை ஊழல் கண்காணிப்பாளராக செயல்பட முடியும் என்பதை மத்திய அரசு விளக்க முடியுமா என்று கேட்டார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த கோப்பை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்கிறோம். இருப்பினும், ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவர் எப்படி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியும் என்பது எங்களுக்குப் புரியவில்லை.

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்ற மிகப் பெரிய பொறுப்பை எப்படி ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கியவரிடம் இந்த அரசு ஒப்படைத்தது என்பதும் ஆச்சரியமாக உள்ளது என்றார்.

பின்னர் வழக்கை 2 வாரங்களுக்கு பெஞ்ச் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

சமீபத்தில்தான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குள்ளானது. இந்தநிலையில் தற்போது தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமன வழக்கில் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X