போக்குவரத்து தொழிற்சங்க தேர்தல்-அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக அங்கீகார தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தேமுதிகவின் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவை தலைவர் கோ.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்காக தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல சங்கங்கள், கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக 6 அமைப்புகளை அரசு முதலில் பேச்சு வார்த்தைக்கு அழைத்து உடன்பாடு கண்டு வந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதிநிதித்துவ தேர்தலில் 10 சதவிகிதம் வாக்குகள் வாங்கிய அமைப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் 6 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளிலும், போனஸ் உள்ளிட்ட பேச்சு வார்த்தைகளிலும் அனைத்து கூட்டமைப்புகளையும் அரசு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு கண்டது.
ஆனால் 1.9.2010 முதல் நடைமுறைப்படுத்த இருந்த புதிய ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்கின்ற அடிப்படையில் தேர்தல் நடத்தி அதில் அதிக வாக்குகள் பெறுகின்ற ஒரு சங்கத்திடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கழகத் தலைவர் விஜயகாந்த் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலன் கருதி ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் வாழ்வு குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளார். அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்களும் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சதவிகித பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலன் பெற புதிய பென்ஷன் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பல்வேறு கால கட்டங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது போன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர் நலனில் அக்கறை காட்டி வரும் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை வருகிற 25 ந் தேதி அன்று நடைபெறவுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையும் மனு செய்திருந்தது.
இந்நிலையில் பல்வேறு சங்கங்களின் போட்டியால் வாக்குகள் பிரியும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக ஆக்கப்பட வேண்டும் என்ற வாதத்திற்கு வலு கூட்டவும், நடைபெறவுள்ள சங்கத் தேர்தலில் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஆதரவு கேட்டுள்ள நிலையில், தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையும், பேரவையில் இணைக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கழக சங்கங்களின் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பேரவை உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் வெற்றிக்கு பாடுபட அயராது உழைக்கும்படி பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரலாம் என்று பேச்சு அடிபட்டு வரும் நிலையில் தற்போது தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தருவது குறிப்பிடத்தக்கது.