கடலூரில் இன்று முழு அடைப்பு-மாணவர்களுக்குப் பாதிப்பு-பலத்த போலீஸ் பாதுகாப்பு
கடலூர்: பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரி கடலூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பந்த் காரணமாக அலுவலகம் செல்வோரும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ. 40 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் கடலூரில் துவங்கப்பட்டது. ஆனால் அப்பணிகள் இன்னும் முடிந்த பாடில்லை. இதற்காகத் தோண்டப்பட்ட சாலைகளை சரிசெய்யவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே, இத்திட்டத்தின் அலட்சியத்தைக் கண்டித்தும், பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்குமாறு வலியுறுத்தியும் கடலூரில் இன்று 1 நாள் முழு அடைப்பு போராட்த்திற்கு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இதனால் கடலூரில் கடைகள் திறக்கப்படவில்லை, தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் வேலை பார்ப்போரும், மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தையொட்டி கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.