தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை- மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 யூனிட்டுகளில் 2 யூனிட்டுகளின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு யூனிட்டின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகா வாட் வீதம் 1050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2வது மற்றும் 3வது யூனிட்டிகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முதலாவது யூனிட்டில் 110 மெகாவாட் மின்சாரமும், 4 மற்றும் 5வது யூனிட்டுகளில் 150 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 410 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த நிலையில் மேலும் ஒரு யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின்வெட்டு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனல்மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பால் ஏற்பட்ட மின்வெட்டாலும், கடும் மழை காரணமாகவும் தூத்துக்குடி நகரம் இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.