கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்-டிரைவர் கைது
சென்னை: முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை இரு தினங்களுக்கு முன் இரவில் தொடர்பு கொண்ட மர்ம நபர், சென்னையில் பிளாட்பார கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் கருணாநிதியின் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டிவிட்டு இணைப்பை து்ண்டித்தார்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த நபர் பேசிய செல்போனின் முகவரி, மதுரை அருகில் உள்ள முகவரியாக இருந்தது. ஆனால், அங்கு போலீசார் விசாரித்த போது, அது போலி முகவரி என்று தெரிய வந்தது. அந்த நபர் சென்னையில் இருந்துதான் பேசியுள்ளார் என்பதும் உறுதியானது.
விசாரணையில், மிரட்டல் விடுத்தவரின் பெயர் சண்முகானந்த கிருஷ்ணன் (35) என்று தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அயன்நந்தன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று போதையில் இருந்த அவர் மொபைல் போனில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.