Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வராக எதியூரப்பா நீடிப்பார்: பாஜக 'நாடகம்' முடிந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதியூரப்பா விலகுவாரா, மாட்டாரா என்ற கேள்வி பெரும் குழப்பத்தில் நீடித்து வந்த நிலையில் அவரே முதல்வராக நீடிப்பார் என்று பாஜக மேலிடம் அறிவித்து விட்டது.

எதியூரப்பா விவகாரத்தில் வரலாறு காணாத கோமாளித்தனங்களை பாஜக செய்து வந்தது.

ஒருபக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா விலகியே ஆக வேண்டும் என்று நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். இப்போது ஜேபிசி விசாரணை தேவை என்று கூறி நாடாளுமன்றத்தை இயங்க விடாமல் செயலிழக்க வைத்து வருகின்றனர்.

ஆனால் மறுபக்கம் எதியூரப்பா விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் நாடகமாடி வந்தனர்.

ரூ. 500 கோடி பெறுமானமுள்ள நிலங்களை தனது மகன்கள், மகள், தங்கை, தங்கையின் மருமகன், தூரத்து சொந்தங்கள் என குடும்பத்தினருக்கு அடிமாட்டு விலைக்கு ஒதுக்க உதவினார் எதியூரப்பா என்பது குற்றச்சாட்டு. இதையடுத்து எதியூரப்பாவின் குடும்பத்தினர் அவற்றை ஒப்படைத்து விட்டனர்.

ஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. மாறாக, எதியூரப்பா மீது எதிர்க்கட்சிகள் குறிப்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி அடுக்கடுக்காக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். மேலும் ரெட்டி சகோதரர்களும் உள் குத்து வேலைகளில் இறங்கியதால், எதியூரப்பாவுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதையடுத்து பதவியிலிருந்து விலகுங்கள் என்று எதியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் அதை உடனடியாக நிராகரித்து விட்டார் எதியூரப்பா. மேலும் தனக்கு ஆதரவாக லிங்காயத் ஜாதியைச் சேர்ந்த மடாதிபதிகளையும் துணைக்கு அழைக்கவே பாஜக மேலிடம் மிரண்டுவிட்டது.

ராஜாவை விலக வைக்க காட்டிய வேகத்தில் பாதியளவு கூட எதியூரப்பா விவகாரத்தில் காட்ட முன்வராத பாஜக எதியூரப்பா அவராகவே விலக வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் எதியூரப்பா விலகுவதாக இல்லை.

பெரும் இழுபறிக்குப் பின்னர் டெல்லிக்கு வந்து சேர்ந்தார் எதியூரப்பா. வந்தவர் முதலில் தனது கட்சித் தலைவரை சந்திக்கவில்லை. மாறாக தனக்கு ஆதரவு சேர்க்க கர்நாடக பாஜக எம்.பிக்களை சந்தித்து தன் பக்கம் இழுத்தார்.

முதலில் பதவி விலக முடியாது என்று முதலில் கூறி வந்த எதியூரப்பா நேற்று மாலையில் கட்சி முடிவை மதிப்பேன் என்றார். அதேசமயம், கட்சிக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. தான் விலகுவதாக இருந்தால், தனக்குப் பதில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் வி.எஸ்.ஆச்சார்யாவையே முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும், ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி தரக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது.

ரெட்டி சகோதரர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்களது ஆதரவு தலைவரான சுஷ்மா சுவராஜ் ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நாக்பூரிலிருந்து டெல்லி திரும்பிய பாஜக தலைவர் கத்காரி, கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது எதியூரப்பாவின் நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் இப்போதைக்கு எதியூரப்பாவே முதல்வராக நீடிக்க அனுமதிப்பது என்ற முடிவுக்கு பாஜக வந்தது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் கத்காரியை எதியூரப்பா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவின் திட்டம் அவரிடம் விவரிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கத்காரி, கர்நாடக விவகாரம் தொடர்பாக கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எதியூரப்பா மீதான இறுதி முடிவை நாளை (இன்று) முற்பகல் 11 மணிக்கு நான் அறிவிக்கிறேன் என்றார்.

ஆனால் இன்று முற்பகல் கத்காரி பேட்டி அளிக்கவில்லை. மாறாக கட்சியின் செய்தித் தொடர்பாளர்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தன் மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முதல்வர் எதியூரப்பா மறுத்துள்ளார்.

இந்தப் புகார்கள் தொடர்பாகவும், நில ஊழல் தொடர்பாகவும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் விரைவில் பஞ்சாயத்துத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து எதியூரப்பா விவகாரம் குறித்து அனைத்துத் தலைவர்கள், அனைத்து மாநில கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முதல்வராக எதியூரப்பாவே நீடிப்பார் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.

பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு அனைத்துத் தலைவர்களும், தொண்டர்களும் தீவிரமாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிவிப்பில் கத்காரி தெரிவத்திருந்தார்.

எதியூரப்பா மீது கை வைக்காமல் விட்டதற்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பிக்களும், லிங்காயத் சமுதாய மடாதிபதிகளின் மிரட்டலுமே காரணம் என்று தெரிகிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பிக்களில் பெரும்பாலானோர் எதியூரப்பா நீக்கப்படக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இவர்களில் பலர் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் கர்நாடக பாஜக எம்.பிக்கள் பிளவுபட்டால் கட்சிக்கு பெரும் கேவலமாகி விடும் என்று நினைத்த கட்சி மேலிடம், தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு எதியூரப்பாவை தப்ப விட தீர்மானித்துள்ளது.

முன்னதாக நேற்று காலை பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது கர்நாடக பாஜக எம்.பிக்கள் பலரும், பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ள நிலையில் எதியூரப்பாவை நீக்குவது சரியாக இருக்காது. அவரை நீக்கினால் கட்சிக்கு கர்நாடகத்தில் எதிர்காலம் இல்லாமல் போய் விடும். மேலும் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில் செயல்பட்டு வரும் அதிருப்தியாளர்களுக்கு வசதியாகி விடும் என்று கூறினராம். இதையடுத்தே எதியூரப்பா மீதான தனது இறுக்கத்தை தளர்த்த பாஜக மேலிடம் முடிவு செய்து இப்போது பல்டி அடித்துள்ளது.

ராஜா விவகாரத்தில் காட்டிய வேகம், எதியூரப்பா விவகாரத்தில் காட்டி வரும் மகா கோமாளித்தனமான நிதானம் ஆகியவற்றால் பாஜகவின் நம்பகத்தன்மை அடியோடு நாசமாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+