இப்போது வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவது எளிதாகிவிட்டது: ஸ்டாலின்
சென்னை: திமுக ஆட்சியில் வீடு கட்டுவதும், திருமணம் நடத்துவதும் எளிதான காரியமாகிவிட்டதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று ஸ்டாலின் பங்கேற்றார். முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஆவாரம்பாளையத்தில் 87 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய அவர்,
ஒரு காலத்தில் வீடு கட்டுவதும், திருமணத்தை நடத்தி வைப்பதும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களால் சுய மரியாதை திருமணங்களும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் வீடுகளை கட்டுவதும் எளிமையான செயலாகிவிட்டது.
தன்னை பெண் என்று அடையாளம் காட்டிக்கொண்டு முதல்வர் பொறுப்பில் உட்கார்ந்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டு முதல் வேளையாக என்ன செய்தார் தெரியுமா?.
ஏழைப் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வந்த திருமண உதவித் திட்டத்தை நிறுத்தினார். நியாயமாக ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும். திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் தந்தால், நான் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லியிருந்தால் நாம் அனைவரும் ஜெயலலிதாவை பாராட்டியிருக்கலாம், வாழ்த்திருக்கலாம்.
ஆனால் அதன்பிறகு மீண்டும் 1996ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். அதனால் தான் மீண்டும் திருமண உதவித் திட்டம் வந்தது என்றார்.
கடத்தி கொலை-குழந்தைகள் பெற்றோருக்கு ஆறுதல்:
முன்னதாக கோவையில் கடத்திக் கொலை செய்யப்பட்ட சகோதர, சகோதரிகளான சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் ஆகியோரின் பெற்றோருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.
அவர்களது வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின் குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குழுந்தைகளின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்தக் கொலையைச் செய்த மோகனகிருஷ்ணன் போலீஸ் எண்கெளண்டரி்ல் பலியானது நினைவுகூறத்தக்கது.