மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பரூக் அப்துல்லா புகழாரம்
நெல்லை: மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய அரசின் காற்று மின்சக்தி தொழில்நுட்ப மையத்தின் சார்பில் 2 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்திதுறை அமைச்சர் பரூக் அப்துல்லா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்தியாவில் மரபுசாரா மின்உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. மின்உற்பத்தி மூலம்தான் வேலைவாய்ப்பும் உருவாகிறது. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கடல், காற்று, புவி வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும்.
காற்றும், நீரும் இலவசமாகக் கிடைப்பது. எனவே, மரபுசாரா மின்உற்பத்தி எளிமையானது. வருங்கால தலைமுறையினருக்கு தூய நீரையும், நல்ல சுற்றுச்சூழலையும் விட்டுச் செல்ல வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றுதான். நமது தேசிய கொடி எப்போதும் உயர பறக்க வேண்டும்.
காற்று, சூரிய வெப்ப மின்உற்பத்தியில் நல்ல வளர்ச்சி உள்ளது. விரைவில் 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு காற்று மின்சாரம் கிடைக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் லடாக், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 3 இடங்களில் புவி வெப்பம் மூலம் மின்சாரம் தயாரிக்க ஐஸ்லாந்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
ஹரியானாவில் கோதுமை அறுவடை செய்தபின் வைக்கோலில் இருந்து மின்சாரம் தயாரிப்பது போல் தமிழகத்திலும் வைக்கோலில் மின்சாரம் தயாரிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications