மழையால் மிதக்கும் மதுரை-கன மழை அபாயத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடல்
வட கிழக்குப் பருவ மழை தென்மாவட்டங்களில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பி விட்டது. இதனால் அதிலிருந்து தண்ணீர்திறந்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து வைகைக் கரையோர மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், கடந்த சில நாட்களாக இலங்கையின் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் நேற்று போல் இன்றும் மழை பெய்யும் என்றார்.
பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்-கருணாநிதி:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
இக் கூட்டத்தில் மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால், நீர் வடிந்ததற்கு பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
40 ஆண்கள், 27 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 88 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாயும், முதல்வசரின் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் வழங்க முதல்வர் ஆணையிட்டார்.