குமரியி்ல் விடிய விடிய கனமழை: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றும், இன்றும் பள்ளிகளுக்கு வழக்கமான விடுமுறை என்றாலும், மழை காரணமாக இவ்விரு நாட்களும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ, சாதாரண வகுப்புகளோ நடத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர் மழை காரணமாக குழித்துறை, தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் உள்ள தென்னந்தோப்புகள், வயல் வரப்புகளில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. திற்பரப்பு அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மண் வீடுகள் இடிந்து விழுகின்றன. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து வருவதால் இடிகின்ற வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 538 வீடுகள் இடிந்துள்ளன. மின்னல் தாக்கி, மின்சாரம் தாக்கி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இதுவரை 7 பேர் உயிர் இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications