தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு திட்டம்
சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு மருத்துவக் கல்லூரியை தொடங்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் ஏழைகளுக்கு தரமான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்காக மருத்துவ சேவைக் கழகம் மற்றும் மருந்து சேமிப்புக் கிட்டங்கியை தொடங்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து சுப்புராஜ் கூறுகையில், தமிழகத்தில் தற்போது 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான். இதன் மூலம் அதிக அளவிலான மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை தமிழக அரசு அளித்து வருகிறது.
தற்போது மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டத்தை தமிழக அரசு தீட்டியுள்ளது. இது தமிழக மருத்துவ வரலாற்றில் மிகவும் முக்கியமான திட்டமாகும்.
தமிழகத்தில் உள்ள தனியார் டிரஸ்டுகள், பல் மருத்துவம், பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் போன்ற படிப்புகளை கிராமப்புறங்களில் தொடங்க தமிழக அரசு ஊக்கம் தருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 6300 மருத்துவ அதிகாரிகள், 7242 ஸ்டாஃப் நர்ஸுகள், 1282 கிராம சுகாதார செவிலியர்கள், 9000க்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் சுப்புராஜ்.












Click it and Unblock the Notifications