தூத்துக்குடியில் போலீஸ் டிரைவர் மீது நவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கல்லூரி மாணவரைத் தாக்கிய போலீஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜார்ஜ் ரோடு காந்திநகரைச் சேர்ந்த உதயகுமார் மகன் திலோக் (20). இவர் கோவையில் உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுமுறைக்கு திலோக் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று மாலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் அந்த வழியாகச் செல்லும் பெண்களை கேலி செய்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து ராஜீவ் நகரைச் சேர்ந்த அமுதா என்பவர் அங்கிருந்த ஆயுதப்படை போலீஸ் டிரைவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திலோக் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீஸ் டிரைவர் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இதனால் ஆத்திரமடைந்த திலோக்கின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் காந்திநகர் பகுதி மக்கள் திலோக்கை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஜார்ஜ் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.