ஸ்பெக்ட்ரம் அமளி-எதிர்க்கட்சிகள் தொடர் பிடிவாதம்-பிரணாப் சமரசத்தை நிராகரித்தனர்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம், ஜேபிசி விசாரணை கோரிக்கையை கைவிடுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய யோசனையை பாஜகவும், இடதுசாரிகளும் நிராகரித்து விட்டனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை கோரி கடந்த 11 நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளி நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று அமளி செய்து வருவதால் ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முடிவு கட்டும் முயற்சியில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி ஈடுபடுத்தியுள்ளது. அவரும் எதிர்க்கட்சிகளிடம் 2 முறை பேசிப் பார்த்தார். பிரச்சினை தீரும் வழியைக் காணோம். எப்படி இதைத் தீர்ப்பது என்றே தெரியவில்லை என்றும் நொந்து போய் கூறினார் பிரணாப் முகர்ஜி.
இந்த நிலையில் நேற்று மீண்டும் பாஜக மற்றும் இடதுசாரி தலைவர்களுடன் போனில் பேசினார் பிரணாப் முகர்ஜி. முதலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன் அவர் பேசினார். பின்னர் சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரியுடன் பேசினார்.
இதுகுறித்து சுஷ்மா கூறுகையில், ஜேபிசி கோரிக்கையை கைவிடுங்கள். நாடாளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கலாம் என்று கூறினார் பிரணாப். இருப்பினும் பாஜகவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஜேபிசி விசாரணை அவசியம் என பாஜக கருதகிறது. அதைத் தவிர வேறு எந்த மாற்று யோசனையையும் பாஜக ஏற்காது என பிரணாபிடம், அத்வானி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்றார்.
இதேபோல எச்சூரியும், ஜேபிசி விசாரணையை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்து விட்டார்.
இதனால் பிரணாபின் சமரச முயற்சி மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே இன்று கூடும் நாடாளுமன்றம் மீண்டும் அமளியை சந்தித்து ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். இன்று இக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சுஷ்மா சுவராஜும், அருண் ஜேட்லியும், ம.பியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்குப் போகவிருப்பதால் கூட்டம் நாளை நடைபெறு்ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.