For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி ஸ்பெக்ட்ரம்-119 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்-உரிமங்கள் ரத்து?

Google Oneindia Tamil News

Kapil Sibal
டெல்லி: 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற 119 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 60 நாட்களுக்குள் தகுந்த விளக்கம் அளிக்காவிட்டால், அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சேவை அளிக்க வகை செய்யும் 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. மொத்தம் 130 நிறுவனங்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு எனும் அடிப்படையில் உரிமங்கள் தரப்பட்டன.

இதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. போலியான நிறுவனங்கள், அடிப்படை விதிகளைக் கூட பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபற்றி மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமம் பெற்ற நிறுவனங்களில் சில, அந்த உரிமத்தை கூடுதல் தொகைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதித்தாகவும் தெரிய வந்து உள்ளது.

தகுதியற்ற பல நிறுவனங்கள் லைசென்சு பெற்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுமன்றமே கடந்த 15 தினங்களாக முடங்கிப் போயுள்ளது.

வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறைவான தொகைக்கு லைசென்சு பெற்ற சில நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் தொகையை கேட்டு பெறுவது பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில், "உண்மையை மறைத்த குற்றத்துக்காக உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டு 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற 119 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீசு அனுப்பத் தொடங்கியுள்ளது.

தொலைத் தொடர்புதுறைக்கு கூடுதலாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர் கபில் சிபல் இத்தகவலை நேற்று தெரிவித்தார். மேலும் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க அந்த நிறுவனங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

இந்த 119 நிறுவனங்களில் 81 நிறுவனங்கள் தகுதியற்ற மற்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிறுவனங்கள் என்ற பட்டியலில் வருவதாகவும், 38 நிறுவனங்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிறுவனங்கள் பட்டியலில் வருவதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.

சில கம்பெனிகள் உண்மைகளை மறைத்து லைசென்சு பெற்று இருப்பதாக கருதுவதாகவும், தவறு செய்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்த நிறுவனங்களிடம் இருந்து வரும் பதில்களை ஆய்வு செய்த பிறகு, அவற்றுக்கு வழங்கப்பட்ட லைசென்சை ரத்து செய்வதா? அல்லது அபராதம் விதிப்பதா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

2008-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பற்றி விசாரிக்குமாறு கம்பெனிகள் விவகார அமைச்சகத்தை அரசு கேட்டுக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிறுவனங்களில் முக்கியமானவை யுனிடெக், வீடியோகான், எஸ்டெல், லூப், ஸவான் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது

பொது நல வழக்கு விசாரணை!

இதற்கிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல அமைப்பு தொடர்ந்துள்ள வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X