சென்னை சிறுவன் கீர்த்திவாசன் கடத்தல்-2 குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷின் மகன் கீர்த்திவாசன் நவம்பர் 1ம் தேதி கடத்தப்பட்டான். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடத்தல்காரர்கள் ரூ. 3 கோடி கோடி கேட்டனர். பின்னர் ரூ. 1 கோடிக்கு சம்மதித்தனர். அதன்படி பணத்தைக் கொடுத்ததும் அவர்கள் சிறுவனை விடுவித்தனர்.
ஆனால் மறு நாளே போலீஸார் துரித கதியில் செயல்பட்டு சாதுரியமாக குற்றவாளிகள் இருவரையும் பிடித்தனர். இருவரும் ரமேஷின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு உறவினர்கள் என்பதும், அவர்களது பெயர்கள் விஜய், பிரபு என்றும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸார் பின்னர் குண்டர் சட்டத்தையும் பிரயோகித்தனர். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அம்பத்தூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிக்கை 330 பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. 11 பிரிவுகளில் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 45 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இருவரும் பயன்படுத்திய கார் திருடப்பட்டது என்பதால் அதுகுறித்தும் தனியாக ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையில், இரு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை தர வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த குற்றப்பத்திரிக்கையை அம்பத்தூர் கோர்ட் ஏற்ற பின்னர் வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி போலீஸார் விண்ணப்பிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications