13-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்-மீராகுமார் முயற்சி தோல்வி-பிரதீபாவிடம் எதிர்க்கட்சிள் மனு
டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியிருப்பதற்கு ஒரு தீர்வு காணவே இக்கூட்டம். ஆனால் மீரா குமாரின் சமரச முயற்சி தோல்வியடைந்தது. ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து எதிர்க்கட்சியினர் மனு அளித்தனர்.
மீரா குமார் முயற்சி தோல்வி:
தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக சபாநாயகர் மீரா குமார் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதில் கலந்து கொண்ட எதிர்க்கட்சியினர் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை உறுதியாக தெரிவித்தனர். குறிப்பாக இடதுசாரி தலைவர்கள் இதை அழுத்தமாக வலியுறுத்தினர்.
ஆனால் அரசுத் தரப்பில் அதற்கு உடன்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
பிரணாப் முயற்சி தோல்வி:
முன்னதாக நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரியை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றார்.
ஆனால் பிரணாபின் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.
நாடாளுமன்றமும் தொடர்ந்து முடக்கம்:
முன்னதாக இன்று கூடிய நாடாளுமன்றத்தில் வழக்கம் போல அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் இன்றும் 13வது நாளாக ஒத்திவைக்கப்பட்டன.
ஸ்பெக்டரம் ஊழலுக்கு ஜேபிசி விசாணை நடத்த வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் தீர்க்கமாக உள்ளதாலும், அரசுத் தரப்பு அதற்கு எதிராக உள்ளதாலும் நாடாளுமன்ற முடக்கம் தொடர் கதையாகியுள்ளது.
பிரதீபாவிடம் மனு:
இதற்கிடையே, இடதுசாரி தலைவர்கள், அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள் 60 பேர் நாடாளுமன்றத்தில் இருந்து நடந்தே குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்த அவர்கள் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அரசை ஜேபிசி விசாரணை நடத்த உத்தரவிடுமாறு அரசுக்கு ஆலோசனை அளிக்க கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications