For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பருத்தி ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாடுகளுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்யும் முன்பு, உள்நாட்டு தேவைக்கு போதிய அளவு பருத்தி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக பருத்தி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க வேண்டும், என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, கருணாநிதி எழுதிய கடிதம்:

பருத்தி பிரச்சினை தொடர்பாக நான் ஏற்கனவே 23-9-2010 அன்று தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதிப்பதற்கு முன்பு உள்நாட்டு தேவைக்கு போதிய பருத்தி கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி இருந்தேன்.

நவம்பர் 1-ந்தேதி 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பருத்தி விலை உயர்ந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் மாதம் கடைசி வாரத்துக்குள் மட்டும் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் பருத்தியை அதிக அளவில் கொள்முதல் செய்ததால் உள்நாட்டு தேவைக்கு போதிய பருத்தி கிடைக்கவில்லை.

பொதுவாக அக்டோபர் மாதத்துக்கு பிறகு உள்ள 4-5 மாதங்களில் புதிய பருத்திகள் சந்தைக்கு வருவதால் விலை குறையும். ஆனால் இந்த ஆண்டு 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதியால் நிலைமை எதிர்மறையாகிவிட்டது. போதிய பருத்தி கிடைக்க வில்லை. தேவையான இருப்பும் வைக்கப்படவில்லை.

நமது போட்டியாளரான சீனா 33 சதவீத பருத்தியை இருப்பு வைத்துள்ளது. ஆனால் நமது நாட்டில் 17 சதவீத இருப்புதான் உள்ளது. இந்த கால கட்டங்களில் அதிக அளவு இருப்பு வைக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

நமது நாட்டில் விவசாய தொழிலுக்கு அடுத்த படியாக ஜவுளி துறையில்தான் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு தேவையான மூலப் பொருட்கள் இருந்தால்தான் அதை தக்க வைக்க முடியும்.

கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் மட்டும் தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

எனவே பருத்தி ஏற்றுமதியை உடனடியாக ரத்து செய்து உள்நாட்டு தேவைக்கு போதிய பருத்தி கிடைக்கவும், விலை குறைவாக கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பருத்தி விலை உயர்வால் பருத்தி நூல் விலையும் உயர்ந்துவிட்டது. அதிக அளவில் பருத்தி நூல் ஏற்றுமதியால் நெசவுகூடங்களுக்கு போதிய நூல் கிடைக்கவில்லை. இதனால் விசைத்தறி, கைத்தறி கூடங்கள், பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே நூல் ஏற்றுமதிக்கு உச்சவரம்பு வைத்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நூல் ஏற்றுமதிக்கு வரியும் விதிக்க வேண்டும்.

இதன் மூலம் பருத்தி, பருத்தி நூல்கள் உள்நாட்டு தேவைக்கு போதிய அளவு கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X