ஸ்பெக்ட்ரம்: ராசாவின் உதவியாளரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசாவின் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவிடம் அமலாக்கப் பிரிவினர் (Enforcement Directorate) விசாரணை நடத்தினர்.
(அன்னிய செலாவணி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் அமைப்பு தான் அமலாக்கப் பிரிவு ஆகும்)
2008ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது ராசாவின் தனிச் செயலராக இருந்த மூத்த அதிகாரி சந்தோலியா.
அவரிடம் நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ள விவரம் இன்று வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டப் பிரிவின்படி (Prevention of Money Laundering Act) சந்தோலியாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரிடம் ராசாவின் பண விவகாரங்கள், முதலீடுகள், நிரா ராடியா உடனான உரையாடல்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த அனைத்து பரிமாற்றங்களும் விஷயங்களும் சந்தோலியாவுக்கு தெரியும் என்று அமலாக்கப் பிரிவு கருதுகிறது.
இந் நிலையில் சமீபத்தில் ராசா பதவி விலகி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பொறுப்பு கபில் சிபல் வசம் வந்தவுடன் சந்தோலியாவை கபில் சிபல் அவரது பழைய துறையான இந்திய பொருளாதாரத் துறை பணிக்கே திருப்பி அனுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய விசாரணையின்போது ஏராளமான விவரங்களை சந்தோலியா அமலாக்கப் பிரிவினரிடம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விவரங்களை சிபிஐயும் கேட்டு்ப் பெற்றுள்ளது.
இவரைத் தொடர்ந்து மேலும் பல அதிகாரிகளிடமும் விசாரணை நடக்கலாம் என்று அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1996ம் ஆண்டில் அன்னிய செலாவணி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும் அமலாக்கப் பிரிவினர் தொடர்ந்து விசாரித்தது நினைவுகூறத்தக்கது.