2ஜி: பிரதமரை அவமதித்துள்ளார் ராசா- உச்ச நீதிமன்றம் கண்டனம்
இந்த வழக்கை நீதிபதி சிங்வி, நீதிபதி கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, ராசாவுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்தை மனதில் கொண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், ராசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை ராசா நிராகரித்துள்ளார்.
பிரதமருக்கு ராசா எழுதிய பதில் கடிதத்தில், இந்த கோரிக்கை நியாயமற்றது, ஒருதலைப்பட்சமானது, தன்னிச்சையானது என கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது இதுபோன்ற வார்த்தைகளையா அமைச்சர் பயன்படுத்துவது? இந்த விஷயத்தில் ராசாவின் போக்கு சரியல்ல. இந்தக் கடிதம் மூலம் பிரதமரையே அவர் அவமதித்துள்ளார்.
அதேபோல சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்தையும் ராசா நிராகரித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அட்டார்னி ஜெனரலின் யோசனையை பெறும் வகையில் இந்த விவகாரத்தை மூத்த அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று சட்ட அமைச்சகம் ராசாவுக்கு யோசனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.
ஆனால் அதையும் ராசா நிராகரித்துவிட்டதோடு சட்ட அமைச்சகத்தை குறை கூறி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சட்ட அமைச்சகத்தின் யோசனை சரியல்ல என்று கூறியுள்ளார்.
இவ்வாறு சட்ட அமைச்சகத்தையும் பிரதமரையும் உதாசீனப்படுத்துவது ஒரு அமைச்சருக்கு அழகா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகளின் இந்தக் கருத்தை ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தியார்ஜுனா மறுத்தார். பிரதமரை அவமதிக்க வேண்டும் என்பது ராசாவின் நோக்கமல்ல. மேலும் சட்ட அமைச்சகத்தின் யோசனையையோ அல்லது பிரதமரின் யோசனையையோ ராசா உதாசீனப்படுத்தவில்லை, நிராகரிக்கவும் இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையில்தான் ராசா செயல்பட்டுள்ளார் என்றார்.
ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.
ராசா, சட்ட அமைச்சகம், பிரதமர் அலுவலகம் இடையே 2007ம் ஆண்டு நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடந்த கடித பரிமாற்றத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டு இந்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.