இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம்: கமிஷனரிடம் புகார்
சென்னை: இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து முன்னணியின் சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் இளங்கோ நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் கொடுத்தார். அதில்,
இந்து முன்னணியின் மாநில தலைமை அலுவலகம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது. அங்கு கடந்த புதன்கிழமை மொட்டைக் கடிதம் ஒன்று வந்தது. அதில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் மதக் கலவரம் நடக்கும், குண்டுகள் வெடிக்கும், கட்டிடங்கள் சிதறும் என்று எழுதப்பட்டிருந்தது.
ஏற்கனவே இதுபோன்று பல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அவை குறித்து போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. எனவே, இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் இது குறித்து விசாரணை நடத்த உளவுப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கடிதம் சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்தில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.