காலவரையற்ற வேலை நிறுத்தம்-வருவாய் துறையினர் திட்டம்
கிருஷ்ணகிரி: காலிப்பணியிடங்களை நிரப்புதல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினர் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யவிருப்பதாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. முருகன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழக்கமான பணிகளுடன், அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களையும் வருவாய்துறை ஊழியர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
புதிய திட்டங்களை அறிவிக்கையில் அதற்கான பணியிடங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இத்துறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில், தொடர்ந்து 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதனால் உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள 6 நிலைகளில் பணியாற்றுவோருக்கு 30 விழுக்காடு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும்.
மாவட்ட அளவில் நீதிமன்ற வழக்குகளை கையாள நேர்முக உதவியாளர் (சட்டம்) என்னும் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும், வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22ம் தேதி துவக்கிய பிரச்சாரம் வரும் 14ம் தேதி நிறைவடைகிறது.
இதற்கிடையே மத்திய செயற்குழு கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக திட்டமிட உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications