சிக்னல் பிரச்சனையால் ரயில்கள் நிறுத்தம் : பயணிகள் அவதி
நாங்குநேரி: நாங்குநேரியில் சிக்னல் பழுதடைந்ததால் நிலையத்துக்குள் வராமல் ரயில்கள் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் பயணிகள் ரயில் நேற்று காலை வழக்கம்போல் நெல்லையில் இருந்து புறப்பட்டது. சரியாக காலை 8.10 மணிக்கு நாங்குநேரி ரயில் நிலையத்துக்கு செல்லும்போது அங்கு சிக்னல் பழுதானதால் நிலையத்துக்கு அரை கிமீ தூரத்துக்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் போராடி ரயில்வே ஊழியர்கள் சிக்னலை சரி செய்தனர். ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு ரயில் 9.10 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.
அதே லைனில் நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்ற கோவை பயணிகள் ரயில் காலை 8.55 மணிக்கு நாங்குநேரி ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது சிக்னல் விழாததால் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் அரை மணி நேரம் போராடி பின்னர் சிக்னலை சரி செய்தனர். இதன்பின்னர் 9.27க்கு ரயில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தது.