ஸ்பெக்ட்ரம் விவகாரம்-ராஜாவைக் கைது செய்யக் கோரி கொட்டும் மழையில் பேரணி
ராமநாதபுரம்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் அதிமுக இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உழல் செய்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கைது செய்ய இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றது.
மேலும், இந்த விவகாரத்தில் தி.முக.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏல ஒதுக்கீடு குறித்த, பிரதமர் மன்மோகன்சிங்கின் அறிவுரைகளை அலட்சியம் செய்ததுடன், அவரை அவமதிக்கும் விதத்தில் ராசா செயல்பட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஸ்பெக்டரம் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர்.ஆ.ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி, அதிமுக இளைஞர் பாசறை - இளம்பெண்கள் பாசறை சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் தொடங்கிய இந்தப் பேரணி பரமக்குடியில் நிறைவடைந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திரளானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
மழை-ராமேஸ்வரத்தில் குறை கேட்ட அதிமுக:
இதற்கிடையே, கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்திற்கு இன்று சென்ற அதிமுக குழு அங்கு மக்களை சந்தித்து குறை கேட்டறிந்தது.
முன்னாள் அமைச்சரும், கட்சியின் சிறுபான்மையினர்நலப் பிரிவு செயலாளருமன அன்வர் ராஜா தலைமையில் சென்ற இக்குழுவினர் மழையால் பாதிக்கப்பட்ட காந்தி நகர், அண்ணா நகர், பள்ளிவாசல் தெரு, மாந்தோப்பு, நடராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ள 700 பேருக்கு அதிமுக சார்பில் மதிய உணவும் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்வர் ராஜா பேசுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிவாரண நடவடிக்கையும் இதுவரை அரசால் செய்யப்படவில்லை என்றார்.