ராஜபக்சேவை விரட்டிய பிரிட்டன் தமிழர்களுக்கு இத்தாலி தமிழர் ஒன்றியம் பாராட்டு
கொழும்பு: ராஜபக்சேவையும், அவரது சகாக்களையும் அவமானப்படுத்தி அனுப்பி வைத்த இங்கிலாந்து வாழ் தமிழ் உறவுகளுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக இத்தாலி மேற்குப் பிராந்திய தமிழர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழின அழிப்பு சூத்திரதாரி மகிந்தாவின் இங்கிலாந்து பயணத்தை முடக்கி, அவமானப்படுத்தி அனுப்பிய, இங்கிலாந்து வாழ் தமிழ் மக்களுக்கும், ஏனைய நாடுகளிலிருந்து சென்று பங்கேற்ற மக்களுக்கும் இத்தாலி மேற்பிராந்திய தமிழர் ஒன்றியம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
கொட்டும் பனியிலும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், கைக்குழந்தைகளுடனும் காத்திருந்து வரலாற்று கடமையை செய்த எமது உறவுகளை பாராட்டுகின்றோம். இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களையும், பெரிதும் பாராட்டுகின்றோம்.
இந்நிகழ்வு எமக்கு இன்னுமொரு உண்மையையும் கூறியுள்ளது. என்னவெனில் நாம் ஒன்றுபட்டால் எதிரியை இந்த உலகத்தில் எந்த மூலையிலுமிருந்தும் விரட்டமுடியும் என்பதுதான்.
எல்லாம் முடிந்து விட்டது என்று ஒதுங்கியிராது தொடர்ந்து எமது அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மற்றைய நாடுகளிலும் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எமது பக்கம் உள்ள நியாயத்தை உலகிற்கு எடுத்துரைக்கமுடியும்.
தேசியத்தலைவர் எமக்கெல்லாம் கற்றுத்தந்த உறுதியும், தன்னம்பிக்கையும் எம்மிடம் உள்ளவரை, எம்மால் எதுவும் முடியும் என்பதையே இச்செயல் எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளது.