சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை பொருள் பறிமுதல், 6 பேர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்பறிமுதல் செய்யப்பட்டது. இதை மலேசியாவுக்கு கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு 12.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. 11.30 மணி அளவில் அந்த விமானத்தில் செல்லும் சில பயணிகள் போதைப் பொருள் கடத்துவதாக மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு மர்ம போன் வந்தது.
இதையடுத்து மலேசியா செல்லும் பயணிகளையும், அவர்கள் உடைமைளையும் போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இதில் சிறு சிறு பொட்டலங்களில் போதைப் பொருள் வைத்திருந்த ராமகிருஷ்ணன் (46), மகேந்திரன் (29), மாரி முத்து (33), குணசேகரன் (33), கண்ணையா (46) எத்திராஜ் (37) ஆகிய 6 பயணிகள் சிக்கினார்கள். அவர்கள் தங்கள் கைப்பைகளில் போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தனர்.
அவர்கள் வைத்திருந்தது அப்ட்ரின் என்னும் வகையைச் சேர்ந்த போதைப் பொருளாகும். அவர்களிடம் இருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள 27 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள் கடத்தும் கும்பல் இந்த 6 பயணிகளையும் தங்கள் வேலைக்கு பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.