இடைவிடாமல் 2 நாளாக பெய்து வரும் மழை-வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை
சென்னை: சென்னை நகரி்ல் நேற்று தொடங்கி தொடர்ந்து நிற்காமல் பெய்து வரும் கன மழையால் சென்னை நகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயுள்ளனர். வாகனப் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இந்த வட கிழக்குப் பருவ மழை சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்றுதான் பலத்த மழை கொட்டத் தொடங்கியது. நேற்று முற்பகல் வாக்கில் தொடங்கிய இந்த பலத்தமழை இந்த நிமிடம் வரை நிற்காமல் தொடர்ந்து பெய்துவருகிறது. சில பகுதிகளில் மிதமான மழையாகவும், பல பகுதிகளில் சற்று கன மழையாகவும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்களிலும் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வடபழனி, திருவான்மியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட நகர்ப் பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, அம்பத்தூர், முகப்பேர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
மழையுடன் காற்றும் வீசுவதால் கடும் குளிரும் காணப்படுகிறது. குறிப்பாக நேற்று இரவு மிகக் கடுமையான குளிர் காற்று வீசியதாலும், நிற்காமல் பெய்த மழையாலும் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். குறிப்பாக மாடி வீடுகளில் தங்கியுள்ளோர் சொல்லொணா துயரமடைந்தனர். குழந்தைகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகினர்.
தலைநகரின் அனைத்துப் பகுதிகளும், புறநகர்ப் பகுதிகளும் முற்றிலுமாக முடங்கி, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதைப் போல காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருப்பதால் வாகனங்களை ஓட்டிச் செல்வோர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.












Click it and Unblock the Notifications