36 சட்டீஸ்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
ராய்பூர்: சட்டீஸ்கர் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்ட 36 சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் காங்கிரஸை சேர்ந்தவர்கள்.
90 பேர் கொண்ட சட்டீஸ்கர் சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது எதிர்கட்சிகள் அம்மாநிலத்தில் குழந்தைகள் பெருமளவில் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பி்ன்னர் அவையின் நடுவே வந்து அமளியில் ஈடுபட்ட அவர்கள் இந்த பிரச்சனைக்கு பொறுப்பேற்று முதல்வர் ராமன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து சபாநாயகர் தரம்லால் கௌஷிக் அமளியில் ஈடுபட்ட 36 பேரை கூண்டோடு சஸ்பெண்ட் செய்தார். அதில் 34 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள், 2 பேர் பகுஜன் சமாஜ் கட்சியினர். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் எதிர்கட்சித் தலைவர் ரவீந்திர சௌபே மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் நந்த்குமார் படேல் ஆகியோர் அடக்கம்.
இன்று அவை கூடியவுடனேயே பிஎஸ்பி உறப்பினர்கள் ஆளும் பாஜக குழந்தைகள் கடத்தலை தடுக்கத் தவறிவிட்டது என்று கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அவர்கள் அன்மையில் கடத்திக் கொலை செய்யபட்ட குழந்தையின் புகைப்படத்தை எல்லோரிடமும் காண்பித்தனர்.
அவை மறுபடியும் கூடியதும் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை முதலில் 12 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
அந்த 36 பேரும் இன்று ஒரு நாள் மட்டும் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் தெரிவித்தார். இருப்பினும் 39 பேர் கொண்ட காங்கிரஸ் வரும் 10-ம் தேதியுடன் நிறைவுபெறும் குளிர்கால கூட்டத்தொடரை நடத்தவிடாமல் இடையூறு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications