திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்களின் கார் கத்தி முனையில் கடத்தல்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்களை கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அயோத்தியாபட்டினம் காளியம்மன் நகரைச் சேர்ந்த காசிநாதன் மகன் பிரகாஷ். இவர் தலைமையில் 5 பேர் காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு நேற்று மாலை திருச்செந்தூர் வந்தனர்.
இங்குள்ள கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் கார் அருகே நின்றபோது அங்கு வந்த ஒருவர் திடீரென கத்தியை காட்டி பிரபு உள்ளிட்டவர்களை மிரட்டினார்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்தனர். அதற்குள் அவர் காரை கடத்திச் சென்று விட்டார். இது குறித்து திருக்கோயில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இசக்கி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் காரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.