திமுகவுடனான கூட்டணி வலுவாகவே உள்ளது-காங்கிரஸ்
டெல்லி: திமுகவுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணி எந்தவித தொய்வும் இல்லாமல் வலுவாகவே உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறியுள்ளார்.
ராஜா உள்ளிட்டோரின் வீடுகளில் நடந்த அதிரடி சிபிஐ சோதனைக்குப் பின்னர் மணிஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து அதுபற்றி விசாரணை நடத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விஷயத்தில் கோர்ட் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
இந்த பிரச்சினையில் தவறுகள் எதுவும் நடைபெறவில்லை என்று சி.பி.ஐ. கருதி இருந்தால் வழக்கு எதையும் பதிவு செய்து இருக்காது. தவறுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்காது. சி.பி.ஐ. விசாரணையின் தொடர்ச்சியாக இப்போது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. என்றாலும் கோர்ட் விசாரணையில் உண்மை வெளிவரும்.
சி.பி.ஐ. நடத்திய இந்த சோதனையால் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தி.மு.க.வுடன் அரசியல் ரீதியிலான கூட்டணி வைத்து இருக்கிறோம். ஊழல் புகார்கள் கூறப்படும் போது, சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த கட்சியும் அதுபற்றிய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காது.
தி.மு.க. காங்கிரஸ் இடையேயான கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் என்றார் திவாரி.
திமுக கூட்டணியில் தொடர்கிறோம்-முஸ்லீம் லீக்
இதேபோல திமுக கூட்டணிக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. கூட்டணியில் தொடருவதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் காதர்மொஹைதீன் கூறுகையில்,
தாம்பரத்தில் வரும் 11ந் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நடைபெறுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதிக்கு, நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு அவர் சிறப்புரையாற்றுகிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மத்திய அமைச்சர் இ.அஹமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020 என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார். தி.மு.க. கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து இருக்கிறது.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சிறப்பான வெற்றி பெறுவதற்காக பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார் காதர் மொஹைதீன்.












Click it and Unblock the Notifications