ராஜா வீட்டில் சோதனை நடந்ததால் திமுகவுடன் உறவு பாதிக்காது: தங்கபாலு நம்பிக்கை
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜாவின் வீடுகளில் நடந்த சிபிஐ சோதனையால் திமுகவுடனான உறவு பாதிக்காது. எப்போதும் போல திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது. இதுதொடர்பாக ஜெயலலிதா கூறி வருவது பொய்யான தகவலாகும் என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவரான தங்கபாலு.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மத்தியில் 2வது முறையாக தொடர்ந்து காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அவரது பிறந்த நாளையொட்டி அவர் நீண்டநாள் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரசுக்கு தி.மு.க.விடமிருந்து எந்தவிதமான மிரட்டலும் இல்லை. தி.மு.க.வும் காங்கிரசும் நட்புக் கட்சிகள் தான்.
தி.மு.க.வுக்கு அரசியல் சாசன விதிகள் நன்றாக தெரியும். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் நாங்களும் துணை நிற்போம் என்று முதல்வர் கருணாநிதியே கூறியிருக்கிறார். அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு தான் இந்த சோதனைகள் (ராஜா வீட்டில் சிபிஐ சோதனை) எல்லாம் நடக்கிறது. இது அவர்களுக்கும் தெரியும்.
இருகட்சிகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது, இது பாதிக்காது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக 2001லிருந்து விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். அதைத் தான் சுப்ரீம் கோர்ட்டும் கூறியிருக்கிறது என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications