ராகுல் காந்தி திடீர் மலேசியா பயணம்: ரப்பர் தோட்டங்களை பார்வையிட்டார்
டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நேற்று திடீரென மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
வழக்கமாக ராகுல் காந்தி எங்கு செல்வதாக இருந்தாலும் பாதுகாப்பு பரிவாரங்களுடன் தான் செல்வார். அவ்வப்போது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களுக்கு கூடத் தெரியாமல் குடிசைகளுக்கு திடீர் விஜயம் செய்வார். தற்போது எந்த வித பாதுகாப்பும் இன்றி அவர் மலேசியா சென்றுள்ளார்.
ராகுல் சொந்த விஷயமாக மலேசியா சென்றிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் வீட்டிற்கு சென்ற அவருக்கு தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் மலேசியா இந்திய காங்கிரஸ் இளைஞரணி தலைவர் டி.மோகன் ராகுலை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி காரில் தனியாக புறப்பட்டார்.
மலேசியா என்றால் நம் நினைவிற்கு வருவது ரப்பர் தோட்டஙகள். அங்குள்ள பல்வேறு ரப்பர் தோட்டங்களை ராகுல் பார்வையிட்டார். அவர் ரப்பர் தோட்டம் வாங்கச் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
ரகசியமாக ரப்பர் தோட்டம் வாங்கவே பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர் ரப்பர் தோட்டங்களை பார்வையிட்டதை மலேசிய போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர்.
இதற்கிடையே ராகுலின் இந்த திடீர் பயணம் குறித்து மத்திய அரசுக்கு தெரியுமா? என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேல் சபை எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலின் இந்த ரகசிய விசிட் குறித்து சோனியாவோ, மத்திய அரசோ வாய் திறக்கவில்லை.












Click it and Unblock the Notifications