முதல்வர் கருணாநிதி திடீர் ஏலகிரி பயணம்
நேற்று கோவையில் அரசு நிகழ்ச்சியிலும், தனியார் நட்சத்திர ஹோட்டல் திறப்பிலும் முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் திடீரென தனது கோவை பயணத்தை முதல்வர் ரத்து செய்தார். முதல்வருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் அவர் போகவில்லை என்று கூறப்பட்டது.
பின்னர் வீடியோகான்பரன்சிங் மூலம் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் கருணாநிதி, சில அசம்பாவிதங்கள் நடந்ததால்தான் தான் கோவைக்கு வர முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று காலை திடீரென ஏலகிரி மலைக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். காலை 8 மணியளவில் அவர் புறப்பட்டுப் போனார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
ஏலகிரிக்கு கருணாநிதி செல்வது இதுவே முதல் முறையாகும். அவர் மட்டுமல்லாமல் முதல்வர் ஒருவர் இங்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
முதல்வரின் திடீர் ஏலகிரி பயணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் முதல்வர் மன சங்கடத்தில் இருப்பதாகவும், அதனால்தான் அவர் அங்கு சென்றிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வரின் மகள் செல்வியும் பெங்களூரிலிருந்து ஏலகிரி விரைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.