கனிமொழி சிவப்பு விளக்கு பொருத்திய காரில் சென்ற வழக்கு தள்ளுபடி
திருநெல்வேலி: சிவப்பு விளக்கு பொருத்திய காரில் பயணம் செய்த விவகாரத்தில் கனிமொழி மீது தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ரவி ஆறுமுகம் (35). நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி தலைவராக உள்ளார்.
ரவி ஆறுமுகம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நடந்த ஒரு விழாவிற்கு கனிமொழி எம்.பி பதிவு எண் இல்லாத சிவப்பு விளக்கு பொருத்திய காரில் வந்தார்.
அந்த காரில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்ததோடு, சைரன் ஒலி எழுப்பிக் கொண்டு வந்தது. ஏற்கனவே அரசு சிவப்பு விளக்கு பொருத்திய காரில் யாரெல்லாம் செல்லலாம் என்று விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி கனிமொழியால் சிவப்பு விளக்கு உள்ள காரில் பயணம் செய்ய முடியாது.
எனவே, விதிமுறையை மீறிய கனிமொழி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கனிமொழி பயணம் செய்த கார் யாருடையது, அதில் யார், யார் எல்லாம் பயணம் செய்தார்கள் என்று பதில் அளிக்குமாறு போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். அதற்கு அவர் அந்த காருக்கு தற்காலிக பதிவுச் சான்றிதழ் இருப்பதாகவும், அதில் பூங்கோதை, கனிமொழி எம்.பி ஆகியோர் இருந்ததாகவும் கூறினார்.
அமைச்சர் பூங்கோதை சிவப்பு விளக்கு பொருத்திய காரில் பயணம் செய்யலாம் என்பதால், அவருடன் கனிமொழி சென்றதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறி என் மனு கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செயது, கனிமொழி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட அவர், இந்திய தண்டனை சட்டம் 188-ன் படி ஒரு நபர் மீது வழக்கு தொடர வேண்டுமானால் அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், இந்த வழக்கை பொறுத்தமட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீது வழக்கு தொடர அரசிடம் இருந்து முன் அனுமதி பெறவில்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications